செவ்வாய், 15 அக்டோபர், 2013

வெளியுறவுக் கொள்கை - இந்தியாவின் பலமே பலவீனமாகி இருக்கிறதா ?


இந்தியாவின் பலமே பலவீனமாகி இருக்கிறதா ?

சுதந்திரத்திற்கு பின் இந்தியாவின் வெற்றிகரமான வெளியுறவுக் கொள்கையாக இருந்துநமது பலமாக கருதப் பட்ட  'நடுநிலைமைக் கொள்கை' , இப்போது இந்தியாவையே வீழ்த்தி விடுமோ என்று அஞ்சும் அளவிற்கு பலவீனமான ஒரு கொள்கையாக மாறிப் போயிருப்பது கால மாற்றத்தின் அடையாளம்.

உலகிலேயே மிகப் பெரிய ராணுவ பலத்தை கொண்ட நான்கு நாடுகளில் ஒன்றாக 2020-ல் இந்தியா இருக்கும்.

இருந்தும்...

சமீபத்தில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் , "பாகிஸ்தான் ராணுவ உடையணிந்த மனிதர்கள் சிலருடன்" ஊடுருவியதில் நடந்த சண்டையில், இந்திய ராணுவ வீர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர் என்று இந்திய ராணுவ அமைச்சர் .கே.அந்தோணி பேசியதில், ஒட்டு மொத்த தேசமே கொதித்து எழுந்தது. பின்னர், மறுநாளே, தான் கூறியதை மாற்றி ''பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்தவர்களும்' என்று கூறினார் அமைச்சர்.
தேசத்தின் பாதுகாப்பு குறித்த முக்கியப் பிரச்சினையில், பாகிஸ்தானின் இராணுவமே , குற்றத்தில் நேரடியாக ஈடுபட்டதை  மறைக்கும் வகையிலான  வார்த்தை ஜாலங்களுடன் இந்திய ராணுவ அமைச்சர் பேச வேண்டிய அவசியம் என்ன?? இது முதல் முறையும் அல்ல. இதற்கு முன் பலமுறை வெளியுறவுத் துறை அமைச்சரும், ராணுவ அமைச்சரும் இது போல பேசி இருக்கிறார்கள்.

ஏன் இவ்வாறு தொடர்ந்து நடக்கிறது ? எங்கு தான் பிரச்சினை ?

அண்டை நாடுகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் இந்தியாவுடன் முட்டிக் கொண்டிருக்கும் நிலை.
தீவிரவாதப் பிரச்சினை வேறு.
அமெரிக்காவின் தலையீடுகள் , மற்றும் பிற உலக நாடுகளுடனான உறவுச் சிக்கல்கள் ...
இந்தியாவின் தற்போதைய நிலை இதுதான்.

இன்றைய நிலையில் உலகிலேயே மிகச் சிரமமான அதே நேரத்தில்  தெளிவில்லாத நிலையில் இயங்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இரு துறைகள் இந்தியாவின் ராணுவத் துறை மற்றும் வெளியுறவுத் துறை.
"தெளிவில்லாத நிலையில் இயங்க வேண்டிய கட்டாயம்"

ஏன் இப்படி ஒரு நிலை

சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து கடந்த 66 வருடங்களாக இந்தியா சமாதானத்தை முன்னிறுத்திய ஒரு நாடாகவே இருந்து வந்திருக்கிறது. சீனா மற்றும் பாகிஸ்தானுடனான போர்கள் அனைத்துமே இந்தியாவின் மீது திணிக்கப் பட்டவை. பாகிஸ்தான் போல ராணுவ ஆட்சிகளால் இந்தியா பாதிக்கப் பட்டதில்லை. இதற்கு முழு முதல் காரணம், இந்திய அரசு, ராணுவத்தை , ராணுவ தளபதிகளை அவர்கள் எல்லைக் கோட்டிற்கு உள்ளேயே கூட சுதந்திரமாக செயல்பட அனுமதித்ததில்லை. எப்போதுமே ராணுவத்தின் மீது அரசின் இரும்புப் பிடி இருந்து வந்திருக்கிறது.
இதனாலேயே , எந்த ஒரு சூழ்நிலையிலும், பாகிஸ்தான் போல, மியான்மர் போல ராணுவப் புரட்சியோ, ராணுவ ஆட்சியோ ஏற்படா வண்ணம், ஜனநாயகம் முன்னிலைப் படுத்தப் பட்டிருக்கிறது.
இது ராணுவம் மீதிலான இந்திய அரசின் நிலைப்பாடு.
அயலுறவுக் கொள்கையை பொறுத்த மட்டிலும் , இந்தியா நடுநிலைமையையே இது காறும் கடை பிடித்து வந்திருக்கிறது.
மேற் கூறிய இரண்டு நிலைப்பாடுகளுமே சுதந்திர இந்தியாவிற்கு சாதகமாகவே இருந்து வந்திருக்கிறது.

ஆனால், கால மாற்றம், உலக அரசியலில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், அறிவியல் முன்னேற்றம் ,உலக மயமாக்கல், இயற்கை வளங்கள்பூகோள அரசியல் போன்ற பலவும் இன்றைய அரசியலை பல சவால்கள் நிறைந்ததாக மாற்றி இருக்கின்றன. இந்த மாற்றங்களினால், இந்தியா, பிற நாடுகளுடனான உறவுகளை  'நடுநிலைமை' என்ற கவசத்திற்குள் சவுகரியமாக மறைந்து கொண்டு எளிதாக கையாள இனிமேலும் முடியாது என்ற நிலைமைக்கு தள்ளி இருக்கிறதுஆனால், தெளிவாக முடிவெடுப்பதில் பழக்கப் படாத இந்தியா, இந்த சூழ்நிலைக்கு ஈடுகொடுப்பதற்கு சிரமப் படுகிறது.

உலகின் மிகப் பெரிய ராணுவங்களை வைத்திருக்கும் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் , ராணுவ பலத்தை எப்படி, எங்கு உபயோகிப்பது எனபது குறித்த சரியான திட்டமிடல்கள் உண்டு. இதனால், அவசியப்படும் , தவிர்க்க முடியாத நேரங்களில் , ராணுவ தளபதியே சூழ்நிலைக்கு ஏற்றபடி முடிவெடுக்கும் அதிகாரம் உண்டு.

இந்த இடத்தில் தான் இந்தியா தடுமாறுகிறதுமிகப் பெரிய ராணுவ பலத்தை கொண்டிருந்தும், இந்திய அரசியல்வாதிகளுக்கு அதன் அருமையோ, அதை பயன்படுத்தும் அறிவார்ந்த முறை பற்றியோ சிறிதும் தெரியவில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்திய ராணுவ பலமோ அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்தியாவின் ராணுவ பட்ஜெட் 46.8 பில்லியன் டாலர்கள். இன்றைய தேதியில்,, ராணுவத்திற்காக அதிகம் செலவழிக்கும் நாடுகளின் வரிசையில் 7ஆவது இடத்தில் இருக்கிறோம். உலக அளவில், கடந்த 5 வருடங்களில் மிக அதிக அளவில் ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்தது இந்தியா தான். பிரான்சிடம் இருந்து நாம் வாங்கும் 126 Rafale fighters க்கு நாம் கொடுக்கும் விலை 12 பில்லியன் டாலர்.

நாம், அணு ஆயுத பலத்திலும் சளைத்தவர்களில்லை என்றாலும்,  'நாங்களாக யார் மீதும் அணு  ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம்' என்கிற பொறுப்பு வாய்ந்த நிலைப் பாட்டை தான் கொண்டிருக்கிறோம்.

வல்லரசு நாடுகளைப் போல ராணுவ பலத்தை பெற்றிருக்கும் இந்தியாவில், அந்  நாடுகளில் இருப்பதைப் போல ராணுவ அதிகாரிகள், ராணுவ அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள், அமைச்சர் இவர்களுக்கிடையேயான கருத்துப் பரிமாறல்களோ, ஒருங்கிணைந்த திட்டமிடல்களோ நடப்பதே இல்லை. அப்படி ஒரு முறையே இல்லை என்பதே சரியாக இருக்கும்.

ராணுவத்திற்கும், ராணுவ அமைச்சகத்திற்கும் இடையில் ராணுவ தளவாடங்கள் குறித்த புரிதலிலொ , அவற்றின் தேவை அறிதலிலோ  மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது என்று ராணுவத்திலிருந்து புகார் குரல்கள் கேட்கின்றன.

ராணுவ அமைச்சர் அந்தோணியே ஒரு முறை சீனா தான் நாம் கவனிக்கவேண்டிய , கவலைப்படவேண்டிய எதிரி என்று கூறினாலும், இதன் மீதான ராணுவமும், ராணுவ அமைச்சகமும், வெளியுறவுத் துறை அமைச்சகமும் உட்கார்ந்து பேசி திட்டமிட்டு  ஒரு புள்ளியில் சந்திப்பது என்பது  நடப்பதில்லை.

அருணாச்சல் பிரதேஷ் குறித்து சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையில் 10 வருடங்களாக 15 முறை  பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. பிரச்சினை தீவிரமடையவில்லை என்று இரு நாடுகளும் சொல்லிக் கொண்டாலும், எல்லையில் சீனா 58,000 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலைகள், 5 சிறு விமான நிலையங்கள் மற்றும் தொலைதொடர்பு இணைப்புகள் என்று தன்னை எந்தச் சூழ்நிலைக்கும் தயார்படுத்திக் கொண்டுள்ளது.
ஆனால், நமது இந்திய பகுதியில் அது போன்ற எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லை.

நம்முடைய அனுபவமுள்ள  கப்பல்  படையும், நம்முடைய பூகோள இருப்பும் கடல் வழியில்  சீனாவை விட நமக்கு சாதகமானதாக இருக்கிறது. இருந்தும் ராணுவ மொத்த பட்ஜெட்டில், 19% மட்டுமே கப்பல் படைக்கு செலவிடப் படுவது அதை பலவீனப்படுத்துவதாக  உள்ளது என்பது நமது நேவியின் வாதமாக உள்ளது.

25 % பட்ஜெட் பெறும் விமானப் படையை பொறுத்தவரையில், தேவையான நவீன உபகரணங்களுக்கு வெளிநாட்டில் வாங்குவது எனபது மிகப் பெரும் ஊழலுக்கு வழிவகுப்பதாக இருக்கிறது. சமீபத்திய ஹெலிகாப்டர் விவகாரம் அதற்கு உதாரணம். அவசரத் தேவைகள் கூட இது போன்ற ஊழல்களால் தடைப் பட்டு விடும் அவலம்.
இதை எல்லாம் தாண்டி இன்னும் கூட வருங்காலத்தில்  200 பில்லியன் டாலர், ராணுவத் தளவாடங்கள் இறக்குமதியில் செலவிட இருப்பதாக இந்தியா கூறுகிறது.  இதை அள்ளிக் கொண்டு போக ரஷ்யா , பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகள் ஆவலுடன் காத்திருக்கின்றன.
எந்த வகையிலும்,[ வாய் சொல் மிரட்டலுக்கு கூட ] பயன்படுத்தப் படாத நமது ராணுவ பலம் மேலும் மேலும் வலுப்படுத்தப்படுவதில் யாருக்கு பயன் ? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
இதற்கெல்லாம் அடிப்படை காரணம் , நம்முடைய அயலுறவுக் கொள்கையான 'நடுநிலைமை கொள்கை'.

கட்டுரையின் ஆரம்பத்தில் கூறியபடி , மாறிவிட்ட உலக அரசியல் களத்தில், அண்டை நாடுகளுடனான உறவுகள் மற்றும் உலக வல்லரசுகளுடனான உறவுகள் பல மாறுதல்களுக்கு உட்பட்டு விட்ட நிலையில், இந்தியா நடுநிலைமையிலிருந்து விலகி , தான் சம்பந்தப் பட்ட பிரசினைகளிலாவது, தனக்கென்று ஒரு தெளிவான நிலைபாட்டை எடுப்பது அவசியமாகிறது. இது காலத்தின் கட்டாயம்.
பொருளாதார வளர்ச்சியடையும் இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டிற்கு, உலக அரங்கில் பொறுப்புகளும் சேர்த்தே அதிகரிக்கின்றன. பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளவும், செயல்படுத்தவும் , பிற நாடுகளை வழிநடத்தவும் நமக்கென்று திடமான கொள்கைகளும், செயல்பாடுகளும் அவசியம். இல்லையெனில், உலக நாடுகள் நம்மை புறம்தள்ளி விடுவதோடு, சிறு  அண்டை நாடுகள் கூட  நம்மை முந்தி சென்றுவிடும். பொருளாதார வீழ்ச்சியும் ஏற்படும்.


உலக / இந்திய அரசியல் நிபுணர்களும், அரசியல்வாதிகளும், வெளியுறவு அதிகாரிகளும், ராணுவ அதிகாரிகளும்,உலக / இந்திய  பொருளாதார மேதைகளும், விஞ்ஞானிகளும் ஒன்றாக அமர்ந்து விரிவாக தெளிவாக விவாதித்து , புதிதான , இந்திய வெளியுறவுக் கொள்கையை வகுக்க வேண்டியது அவசரமான அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக